August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்னிலையாகாத பிள்ளையான்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று (12) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இதுவரை முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பில் எமது செய்தியாளர் தொலைபேசி வழியில் அவரை தொடர்பு கொண்டு வினவிய போது இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமூகமளிக்க மாட்டார் என தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய செனல் 4 தொலைக்காட்சியில் அவரது முன்னாள் செயலாளரான அசாத் மௌலானா என்பவர் வெளியிட்ட கருத்து குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்னிலையாகாத பிள்ளையான்

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி ஒளிபரப்பான அந்த காணொளியில் முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மற்றும் ஏப்ரல் 21 குண்டுதாரிகளுக்கு இடையே இடம்பெற்றதாக கூறப்படும் சந்திப்பு மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் தகவல் வெளிப்படுத்தப்பட்டிருந்ததது.

குறித்த காணொளிக்கு செனல் 4 தொலைகாட்சி ‘ஸ்ரீ லங்கா ஈஸ்டர்ஸ் பொம்பிங் டிஸ்பெஜர்ஸ்’ எனப் பெயரிட்டிருந்தது.2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ராஜபக்ஷர்களின் அரசியல் எதிரிகளை இலக்கு வைத்துத் துணை இராணுவ கொலை குழுவின் அங்கத்தவர்களை பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இணைத்துக் கொண்டுள்ளதாக செனல் 4 தொலைக்காட்சி வெளிப்படுத்தியது.

இந்த காணொளியில் அடங்கும் சர்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகள் ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பிலான சமர்ப்பணங்களை நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் முன்வைத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.